இலங்கை துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் 13 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான Division–3 கடினபந்து துடுப்பாட்ட (இரண்டு இன்னிங்ஸ்) போட்டி இன்று (29.01.2026) கிளிநொச்சி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் அக்கறாயன் மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அக்கறாயன் மகா வித்தியாலய அணி 18 ஓவர்களில் 47 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ரொஜிலியோ 19 ஓட்டங்களைப் பெற்றார். கிளிநொச்சி மகா வித்தியாலய பந்து வீச்சாளர்களில் துஜிந்தன் மற்றும் டினுஜன் தலா 3 விக்கெட்டுகளையும், கபினன் 2 விக்கெட்டுகளையும், பிராந்தகன் மற்றும் பிரநாத் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி, அணித்தலைவர் ஷாதீன் அவர்களின் அபாரமான கன்னிச்சதத்துடன் 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 249 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. கிளிநொச்சி மகா வித்தியாலய அணி சார்பில் ஷாதீன் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களையும், பிராந்தகன் 25, கபிஷன் 15, பிரநாத் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அக்கறாயன் மகா வித்தியாலய அணி 54 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அலன் ஜெனிஸ்டன் 14 ஓட்டங்களைப் பெற்றார். கிளிநொச்சி மகா வித்தியாலய பந்து வீச்சாளர்களில் டனுஜன் 6 விக்கெட்டுகளையும், பிரநாத் 3 விக்கெட்டுகளையும், துஜிந்தன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி இன்னிங்ஸுடன் 148 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரியதும் அபாரமானதுமான வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.